தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.
கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழக உட்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.