தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. வானிலை மையம் கூல் கூல் தகவல்!
வெப்பசலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கர்நாடகா, கேரளா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களிலும் பருவமழை வெளுத்து வருகிறது.
இதனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. பருவமழையால் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இயல்பான அளவில் பருவமழை
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, தென்மேற்கு பருவமழையின் முதல் 2 மாதங்கள் முடிந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை ஒட்டி மழை பதிவாகியுள்ளது.
50% அதிகமாக மழை
கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை தமிழகம், புதுச்சேரியில் 112 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 121 மி.மீ. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாக 50 சதவீதத்திற்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
மதுரையில் அதிகம்
கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகமாக மதுரையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு மழை
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்பசலனம் காரணமாகவும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.