மின்பாதை வசதியில்லை: காற்றாலை உற்பத்தியை குறைக்க சொல்லும் மின்வாரியம்
ஆரல்வாய்மொழி: போதிய மின்பாதை வசதி இல்லாததால் முப்பந்தல் காற்றாலைகளில் மின்உற்பத்தியை குறைக்க மின்பகிர்மான நிறுவனம் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கோவை, தென்காசி, முப்பந்தல் என 3 கோட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காற்றாலைகள் மூலம் சுமார் 7,000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
1200 காற்றாலைகள்
முப்பந்தல் கோட்டத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தென்மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தென்மேற்குப் பருவக்காற்று
இங்கு தென்மேற்கு பருவக்காற்று விநாடிக்கு 15 முதல் 25 மீட்டர் வேகத்தில் வீசுகிறது. இதனால் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.
மின்பாதை வசதியில்லை
முப்பந்தல் கோட்டத்தை பொறுத்தவரை இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, அதிக மின்தேவையுள்ள சென்னை, கோவை போன்ற இடங்களுக்கு கொண்டு செல்ல மின்பாதை வசதி இல்லை.
உற்பத்தியை குறைக்கவேண்டும்
இதனால் காற்று அதிகம் வீசும் காலத்தில் காற்றாலைகள் மின் உற்பத்தியை குறைக்க மின் பகிர்மான நிறுவனம் அறிவுறுத்துவதாக காற்றாலை நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மின் உற்பத்தியில் சிக்கல்
அரசின் இந்த முடிவால் வாய்ப்பு இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
மின்பாதை அமைக்கப்படுமா?
தமிழகத்தில் தற்போது மின் தட்டுப்பாடு உள்ள நிலையில், முப்பந்தல் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்தேவையுள்ள பகுதிக்கு கொண்டு செல்ல மின்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.