இனிதே முடிந்த வட கிழக்குப் பருவ மழை.. இந்தாண்டு 53% கூடுதல்.. ரமணன் சொன்ன ‘குட் நியூஸ்’!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முடிவடைந்து விட்டதாகவும், இந்தாண்டு வழக்கத்தை விட 53 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் கடைசியில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அடுத்தடுத்து பரவலாக கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்தன.
அதிலும் குறிப்பாக டிசம்பர் 1ம் மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
கூடுதல் மழை...
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ மழை கிடைக்கும். ஆனால் நடந்து முடிந்த வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்றுவரை தமிழகத்தில் 68 செ.மீ மழை பெய்துள்ளது. இதுசராசரி அளவைவிட 53 சதவீதம் கூடுதலாகும்.
காரணம்...
கூடுதல் மழைக்கு முக்கிய காரணம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக உருவானது தான். இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றதும், அவை தமிழகத்திற்கு அருகில் நிலைகொண்டதும், அந்தமான் பகுதியில் வெப்பம் குறைவாக இருந்ததும் தமிழகத்தில் கூடுதல்மழை பெய்ய காரணமாக அமைந்தது.
தொடர்மழை...
பொதுவாக தீவிர காற்றழுத்த தாழ்வு நிலைகள் வேகமாக நகரும் காரணத்தால் மழைபொழிவு குறைவாகவே இருக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளின் குறைந்த வேகம் கடல் பகுதிகளில் நீண்டநேரம் நிலைகொள்ளும் தன்மைகொண்டது. அந்தவகையில் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான பெரும்பாலான நிகழ்வுகளும் வலு குறைந்தது காரணமாகவே தொடர்மழை ஏற்பட்டது.
கடந்த ஆண்டுகளில்...
கடந்த 2013-ம் ஆண்டில் 3 புயல்கள் உள்பட பல்வேறு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியும் தமிழகத்தில் சராசரியைவிட 33 சதவீதம் குறைவாகத்தான் மழை பெய்தது. 2014-ம் ஆண்டு 1 சதவீதம்தான் கூடுதல்மழை பொழிந்தது.
2005ம் ஆண்டு...
ஆனால் 2005-ம் ஆண்டில் பல்வேறு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவானதால் சராசரியைவிட 79 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. அதேபோல 1993-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் 64 சதவீதம் கூடுதலாக மழைபெய்துள்ளது.
சிவகங்கை...
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் வடக்குமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தாலும் மதுரை, சிவகங்கை, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
எல் நினோ...
அதற்கு, இலங்கையை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் எந்த காற்றழுத்தமும் உருவாகாததே காரணம். அதேபோல், உலகை அச்சுறுத்தி வரும் எல் நினோ மாற்றமும் இந்தாண்டு கனமழைக்கான காரணங்களில் ஒன்று ஆகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மீனம்பாக்கம்...
சென்னை மீனம்பாக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் மாதம் 107 செ.மீ பெய்தது. ஆனால் அதைவிட அதிகமாக கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 114 செ.மீ மழை பெய்தது. இதன்மூலம் 30 வருடங்களுக்கு பிறகு, மீனம்பாக்கத்தில் அதிகமழை பொழிவு என்ற புதிய பதிவையும் இந்த வடகிழக்கு பருவமழை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.