தமிழகத்தின் முதல் பிராந்திய கூட்டணி... ராமதாஸின் சமூக ஜனநாயகக் கூட்டணி
சென்னை: சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ கூட்டணி இன்றி போட்டியில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
தேசிய கட்சிகளோ, மாநில கட்சிகளோ தங்களுக்கு சாதகமான கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு தங்களின் பலத்தை நிரூபித்து வந்துள்ளனர்.
இடைத்தேர்தலில் கூட கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய நிலைதான் இன்றைக்கு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது அணிக்கு அணி தாவி போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வரும் லோக்சபா தேர்தலில் திராவிட கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ கூட்டணி கிடையாது என்று அறிவித்து விட்டது.
அது மட்டுமல்லாது தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியின் பெயரையும் ‘சமூக ஜனநாயக கூட்டணி' என்று அறிவித்துவிட்டது. இந்த கூட்டணியில் யார்? யார்? இடம் பெறப்போகிறார்கள் என்பது டாக்டர் ராமதாசுக்கு மட்டுமே வெளிச்சம் இதுவரை இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள கூட்டணிகளைப் பற்றியும் அவை ஆட்சியை கைப்பற்றியதைப் பற்றியும் மேற்கொண்டு தெரிந்து கொள்வோம்.
தேசிய முன்னணி
போபார்ஸ் பீரங்கி ஊழல் புயலை கிளப்பிய நேரத்தில் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதன் அமைப்பாளர் ஆனார் வி.பி.சிங். இந்த கூட்டணியில் ஜனதா கட்சி, ஜனமோர்ச்சா, தெலுங்கு தேசம், லோக்தளம், தி.மு.க. அசாம் கணபரிஷத், காங்கிரஸ்(எஸ்) ஆகிய 7 கட்சிகள் இணைந்தன. இந்த கூட்டணி 1989 ஆம் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது. பாஜக, இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. 11 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தால் வி.பி.சிங்.
ஐக்கிய முன்னணி
ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் 1991-96 கால கட்டத்தில் மீண்டும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். நரசிம்மராவ் பிரதமரானார். ஐந்தாண்டுகால ஆட்சிக்கு பின்னர் 1996ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட மாநில கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கின. இதில் பதின்மூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். இக்கூட்டணியைச் சேர்ந்த தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமராக பதவி வகித்தனர். இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
கவிழ்த்த காங்கிரஸ்
ஆனால் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு வருடத்துக்குப் பின்னர் தேவ கவுடா பதவி விலகி குஜ்ரால் பிரதமரானார். ஆனால் ஒரு வருடத்துக்குள் காங்கிரசு தனது ஆதரவை முழுமையாக விலக்கிக் கொண்டதால் குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. அதோடு ஐக்கிய முன்னணியும் கலைந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி
மத்தியில் இனி கூட்டணி ஆட்சிதான் செல்லுபடியாகும் என்பதை தேசிய கட்சிகள் உணர்ந்து கொண்டன. 1998ல் பாஜக தலைமையில் 13 கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கின. இக்கூட்டணியின் தலைவராக வாஜ்பாயும், ஒருங்கிணைப்பாளராக சரத்யாதவும் செயல்பட்டனர். இந்த கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. வாஜ்பாய் பிரதமராக தேர்வானார். காங்கிரஸ் அல்லாதகாங்கிரஸ் கட்சியை சேராத தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் வாஜ்பாய்தான்.
நாட்டின் விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானது. 2004, 2009ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது இந்த கூட்டணி. இந்த கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகிக்கிறார்.
அதிமுக, திமுக
தமிழகத்தை சேர்ந்த திராவிடக் கட்சிகள் இதுவரை தேசிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. எந்த கூட்டணி ஆட்சி என்றாலும் அதில் திமுக தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
மூன்றவது அணி
லோக்சபா தேர்தல் நெருங்கும் ஒவ்வொருமுறையும் மூன்றாவது அணி பற்றிய பேச்சு கிளம்பும். பின்னர் கிடப்பில் போடப்படும். இந்த முறை தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் முதல் முறையாக தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் ‘சமூக ஜனநாயக கூட்டணியை அறிவித்துள்ளார்.
யார்? யார்?
இந்த கூட்டணியில் இடம் பெறப் போகும் கட்சிகள் யார்? யார்? தலைமை பாமக என்றால் மாநிலத்தில் உள்ள பிற கட்சிகள் பாமக உடன் இணைவார்களா? யார்? யாருடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்பது தெரியவில்லை. இதேமுறையை பின்பற்றி திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி பெயரை அறிவிக்குமா என்பது லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் தெரியவரும்.