தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - இடியோடு மழையும் பெய்யும்!
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், இடியோடு மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சுட்டெரிக்கும் வெயில், தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திர காலகட்டமாக இருப்பதால் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பம் அதிகரிப்பு
கோடையின் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கி சுற்றுலாவிற்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது
நீலகிரியில் மழை
நீலகிரியில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி, கொலக்கம்பை, பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மழை பெய்தது. குன்னூர் நகர பகுதிகளில் மட்டும் 5 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் 3 இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் ரயில் ரத்து செய்யப்பட்டது. மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோடை மழை
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கோடை மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இடியுடன் பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அருவிகளில் தண்ணீர்
நாகர்கோவில் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இடையிடையே ஆலங்கட்டி மழை பெய்தது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் கொட்டியது.
இடியோடு மழை
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.