4 வருடங்களில் 22% "ஜம்ப்"பைக் கண்ட தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை!
சென்னை: கடந்த 4 வருடங்களில் தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களால் தேர்தல் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்றிப் போட முடியும் என்பதால் இவர்கள் மீதான கவனம் அரசியல் கட்சிகளிடம் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட 50 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம்தான் என்பது நினைவிருக்கலாம்.
6 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்
இந்தத் தேர்தலில் 6 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்கள் ஆவர்.
பெயர் பதிவில் பெரும் ஆர்வம்
கடந்த 2011 தேர்தலில் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர்தான் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ளவர்களில் ஐந்து பேரில் நான்கு பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதாவது வாக்காளர்களாகப் பெயர் பதிவு செய்வதில் இந்த முறை அதீத ஆர்வம் காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பணி
வாக்காளர்களை பதிவு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் காட்டிய அக்கறையும், தீவிரமும்தான் இந்த அளவுக்கு அதிக அளவிலான வாக்காளர்கள் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
8 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ்
பெயர் சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இந்த முறை தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 8 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இடமாற்றம்
22 சதவீத உயர்வில் கிட்டத்தட்ட பாதி அளவு உயர்வுக்குக் காரணம் வாக்காளர்களின் இடமாற்றம்தான் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதாவது வீடுகளை மாற்றியது தொடர்பான காரணங்கள்.
வட மாநில தொழிலாளர்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் கட்டுமானத் தொழில் தொடர்பாக இங்கு வந்து செட்டிலாகியுள்ளனர். அவர்களும் வாக்காளர்களாக தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுவும் வாக்காளர் எண்ணிக்கை உயரக் காரணமாம்.