மேலாண்மை வாரியம்.. மத்திய அரசு அமைக்காவிட்டால் பாஜகவை மக்கள் நிராகரிக்க வேண்டும்!
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே செய்து பழக்கப்பட்டுள்ள பாஜக மத்திய அரசு இதைச் செய்யுமா என்பது சந்தேகம்தான்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அதன் மூலமாக காவிரி நீர்ப் பங்கீட்டை கண்காணிக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சம்.
ஆனால் இந்த மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு இதைச் செய்ய முன்வரவில்லை. காங்கிரஸ் மத்திய அரசும் சரி, இப்போதைய பாஜக மத்திய அரசும் சரி, இதில் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளன.
துரோகம் மட்டுமே செய்யும் மத்திய அரசு
தமிழகம் என்று வந்து விட்டால் துரோகம் மட்டுமே செய்வது என்பது மத்தியில் உள்ள அரசுகளுக்கு அல்வா சாப்பிடுவது போலாகி விட்டது. அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் செயல்படுகிறார்கள்.
மேலாண்மை வாரியத்தில் அரசியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் அரசியல் செய்து வருகிறார்கள். காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி, தமிழகத்தைப் பொறுத்தவரை தேறாத கட்சிகள். அதாவது தனியாக நின்றால் ஒரு சீட் கூட கிடைக்காது. ஆனால் கர்நாடகத்தில் நிலைமை வேறு.
அரசியல் லாபத்திற்காக
கர்நாடகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ளது காங்கிரஸ். அங்கு ஏற்கனவே ஆண்ட கட்சி பாஜக. இரு கட்சிகளும் அங்கு பலம் வாய்ந்தவை. எனவே இதை மனதில் கொண்டு மத்தியில் ஆட்சியில் அமரும் காங்கிரஸ் அல்லது பாஜக செயல்படும் கேவலமான அரசியல் தொடர்கிறது.
தமிழகத்தைத் தூக்கி தூரப் போடு
தமிழகத்தின் வளம் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக்கோ, தமிழகம் உரிமை என்று கேட்டால் முரட்டுத்தனம் காட்டு. தூக்கி அதை குப்பையில் போடு. இதுதான் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் எழுதப்படாத கொள்கை. இதில் பாஜகவுக்கும் சரி காங்கிரஸுக்கும் சரி வேறுபாடே கிடையாது. இதையொட்டிதான் தமிழக காங்கிரஸ், பாஜக தலைவர்களும் பேசுவார்கள், செயல்படுவார்கள். உணர்ச்சியெல்லாம் காட்டவே மாட்டார்கள்.
இப்போதும் செயல்படாவிட்டால்
தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. மாறாக, மத்திய அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளதால், மத்திய அரசு அதற்கு முன்வரப்போவதில்லை. அதை சுப்ரீம் கோர்ட் விசாரணையின்போதே அது கோடிட்டுக் காட்டி விட்டது. பாஜக, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளும் கர்நாடகாவில் மட்டுமே செல்வாக்கோடு இருப்பவை என்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைவது கானல் நீர்தான். ஆனால் இப்போது இதை மத்திய அரசு செய்யாவிட்டால், செய்யுமாறு தமிழக பாஜக அழுத்தமாக வலியுறுத்தாவிட்டால் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை புறக்கணித்து தூக்கி தூரப் போட வேண்டும்.