தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு தகராறு... பயணியின் மூக்கைக் கடித்த டிரைவர்!
கோவை: தாராபுரம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணியின் மூக்கைக் கடித்து விட்டார் டிரைவர். படுகாயமடைந்த பயணியை மருத்துவமனையில் சேர்த்து தையல் போட்டனர்.
பிப்ரவரி 5ம் தேதி தாராபுரத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும் பயணிகள் கீழே இறங்கினர். அப்போது பஸ் டிரைவர் செல்வராஜும், சசிக்குமார் என்ற கார் மெக்கானிக் ஷாப் உரிமையாளரும் படிக்கட்டில் இறங்கியபோது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இருவரும் கடுமையாக வாதம் புரிந்தனர். இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் பிரித்து விட்டனர். இந்த சமயத்தில் திடீரென செல்வராஜ், சசிக்குமார் மீ்து பாய்ந்து அவரது மூக்கை பலமாக கடித்தார். இதனால் ரத்தம் கொட்டியது. வலியால் அலறித் துடித்தார் சசிக்குமார்.
உடனடியாக அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தையல் போடப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.