மத்திய அரசின் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் புதிய கல்வி கொள்கை- செங்கோட்டையன்
தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: மத்திய அரசின் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்வி கொள்கை இம்மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்திலுள்ள மாணவர்கள் திறமையானவரகளாக இருந்தாலும் அவர்களின் பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு உயர்கல்வியான மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இதே போன்ற அடுத்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக மாணவர்கள் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதுதொடர்பாக 22.5.2017 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியையும், பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணியையும் மேற்கொள்ளவுள்ளது.
அடுத்த கல்வியாண்டான 2018 - 2019ல் 1,6,9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் என்றார். மத்திய அரசின் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்வி கொள்கை இம்மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.