சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் : பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி கண்டனம்
ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டதற்கு பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சிக்கு பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் இசைக்கப்பட்டது. பொதுவாக மத்திய அரசு நிறுவன விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு.
ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐ.ஐ.டி.,யில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் வேண்டுமென்றே சமஸ்கிருதத் திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயல் இது. தமிழகத்தில் எப்படியாவது சமஸ்கிருதத்தை புகுத்த வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தது என்று தமிழர் தேசிய முண்ணனியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தொடர்ந்து தமிழ் விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் ஐ.ஐ.டி வளாகத்திற்கு மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் வழங்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.