சென்னையில் ஆந்திரா பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன! கண்ணாடிகள் உடைந்து சிதறின!!
சென்னை: 20 தமிழரை படுகொலை செய்த ஆந்திரா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அம்மாநில அரசு பேருந்துகள் சென்னையில் அடித்து நொறுக்கப்பட்டன.
திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தமிழகத்தில் பல இடங்களில் ஆந்திரா அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அருகே பூவிருந்தவல்லியில் ஆந்திரா பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழர் முன்னேற்றப் படையினர் நடத்திய இத் தாக்குதலில் ஆந்திரா மாநில அரசின் பேருந்து கண்ணாடிகள் உடைந்தன.
இதேபோல் சென்னை கோயம்பேட்டிலும் ஆந்திரா பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியதாக தமிழக முன்னேற்றக் கழகத்தினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.