விலங்குகள் நல வாரிய தூதர் பதவியில் இருந்து ரஜினி மகள் செளந்தர்யா விலக கோரி போராட்டம்
திருச்சி: விலங்குகள் நல வாரிய தூதர் பதவியில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா விலகக் கோரி வரும் திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுவுக்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது விலங்குகள் நல வாரியம். இந்த அமைப்பு தமிழர்களின் கலாசாரத்தை அழிக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இந்த நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் தூதராக ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்க்கும் விலங்குகள் நல வாரியத்துக்கு வேண்டுமென்றே செளந்தர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் குற்றச்சாட்டு. ஆகையால் செளந்தர்யா உடனே அப்பதவியில் இருந்து விலக வேண்டும்; இல்லையெனில் திங்கள்கிழமை முதல் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.