7 தமிழர் விடுதலைக்கு முட்டுக்கட்டை: பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டிய நூற்றுக்கணக்கானோர் கைது!
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை மத்திய அரசு எதிர்ப்பதைக் கண்டித்து சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய தமிழ் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
தற்போதைய பாரதிய ஜனதா அரசும் உச்சநீதிமன்றத்தில் 7 தமிழரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடி வருகிறது. இதனைக் கண்டித்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தந்தை பெரியார் தி.க., மே 17 இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசார் அனைவரையும் கைது செய்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.