டிசம்பரில் பெரும் காற்று, இயற்கை சீற்றம் - பஞ்சாங்கம் கணிப்பு
டிசம்பர் 11 முதல் 14 வரை பெருங்காற்று இயற்கை சீற்றம் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: வர்தா புயல் சென்னையை சிதைத்து சின்னாபின்னாமாக்கியுள்ளது. வங்கக் கடலில் கடந்த 7-ந்தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக உருவானது. வர்தா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.
இந்நிலையில் அதிதீவிர வர்தா புயலின் மையப்பகுதி சென்னைக்கு வடக்கே மாலையில் கரையைக் கடந்தது. சென்னையில் மணிக்கு 192 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்ததாகவும், ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்ததாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் வர்தா புயலால் சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை, இயற்கை சீற்றம் குறித்து தமிழ் பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத இறுதியில் அதாவது டிசம்பர் 11 முதல் 14 வரை இயற்கை சீற்றம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல டிசம்பர் மாத இறுதியில் இன்னும் ஒரு இயற்கை சீற்றம் உண்டாகும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
டிசம்பர் 17ம் தேதி முதல் 19 வரையிலும், 22, 24,28,29 ஆகிய தேதிகளில் இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. இதற்கு காரணம் கேதுவும், சுக்ரனும் கும்பத்தில் ஒன்று கூடுவதால் இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும், ஜனவரியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது.
பஞ்சாங்கம் கணித்தது போலவே டிசம்பர் 11ல் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னை வளைத்து வளைத்து சூறையாடியது. டிசம்பர் இறுதியில் எப்படியிருக்குமோ? பார்க்கலாம்.