ஆளுக்கு ஒரு சேனல்.. அழகழகாய்...எங்குமில்லாத புதுமையாய் தமிழகத்தை கலக்கும் கட்சி டிவிகள்!
தமிழக மக்களை டிவி சேனல்கள் கட்டிப்போட்டுள்ளன.
சென்னை: ஒருவழியாக அதிமுகவும் தங்களுக்காக ஒரு சேனலை தொடங்கிவிட்டார்கள்!!
30 வருஷத்துக்கு முன்னாடி தமிழக மக்களுக்கு கிடைச்ச வரப்பிரசாதம் தூர்தர்ஷன் மட்டும்தான். இப்படி வீட்டில் முடங்கி கிடந்த மக்களுக்கு புது விடிவெள்ளியாய் வீட்டில் முளைத்ததுதான் டிவிசேனல்.
நேரடி செய்தி இல்லாத காலகட்டம் அது. ஏற்கனவே படிக்கப்பட்டு, பின்பு தாமதமாக ஒளிபரப்பு செய்யப்படும். செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கும்போது ஏதாவது அவசர தகவல் வந்துவிட்டால், ஸ்கிரீனில் ஒருவரின் கரம் நீட்டப்பட்டு குறிப்பு வந்து சேரும், இல்லையென்றால் ஒரு தாள் அங்கு நீட்டப்படும். அதனை வாசிப்பாளர்கள் சற்றுமுன் கிடைத்த செய்தி என்று படிக்கும் அழகே தனியாகத்தான் இருந்தது. அந்த தூர்தர்ஷன் செய்திகளில் 90 சதவீதம் மத்திய அரசின் செய்திகள்தான் ஒளிபரப்பாகும்.
பிள்ளையார் சுழி
இன்று டி.வி. சேனல்களில் பெரும்பாலானவை அரசியல் கட்சிகளுக்கு சொந்தமானவை. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருமே தங்களுக்கென ஒரு சேனலை ஆரம்பிக்க தொடங்கிவிட்டனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது சன்டிவிதான். கருணாநிதி என்ற பிம்பத்தை வைத்து இந்த சேனல் தொடங்கப்பட்டது.
இணைபிரியவில்லை
அதிலும் லைவ் சேனல் வந்தபிறகு மூலை முடுக்குகளில் நிகழும் தகவல்களை எல்லாம் உடனுக்குடன் அறிய முடிந்தது. நாளடைவில் இதிலும் விரிசல் எழத்தான் செய்தது. அதையொட்டியே கலைஞர் டிவி உருவானது. ஆனாலும் கருணாநிதி இல்லாமல் சன் டிவியால் இயங்க முடியவில்லை, இயங்கவும் இல்லை. சன் டிவியும், கலைஞர் டிவியும் செய்தி மாதிரிகளில் இணைபிரியாமல்தான் உள்ளன.
ஜெயலலிதா பெயர்
சன் டிவிக்கு அடுத்தபடியாக பெயர் பெற்றது ஜெயா டிவி. ஜெயா செய்தியை பொறுத்தவரை, ஜெயலலிதா என்ற பெயரை அவர் உயிருடன் இருக்கும்வரை பகிரங்கமாக செய்திகளில் பயன்படுத்தவே இல்லை. இதற்கு காரணம் பயமா? மரியாதை என்பதற்குள் நாம் போக தேவையில்லை. ஆனால் ஜெயலலிதாவின் பெயர் சொல்லப்படாததை தமிழக மக்கள் உன்னிப்பாகவே கவனித்து வந்தனர். கருணாநிதியும், ஜெயலலிதாவும் தேர்தல் சமயங்களில் மிக சரியாகவே சன்டிவியையும், ஜெயா டிவியையும் பயன்படுத்தி கொண்டனர். அர்ச்சுணனுக்கு வில்லை போல அமைந்தன இந்த இருவருக்கும் இரு சேனல்களும்.
மக்கள் டிவி
இதேபோல, காங்கிரஸ்காரர்கள் சார்பாக சேனல்கள் தொடங்கப்பட்டன. தங்கபாலுவின் மெகா டிவி ஆகட்டும், வசந்தகுமாரின் வசந்த் டிவி ஆகட்டும் காங்கிரஸ் கட்சி செய்திகளை அடிபிறழாமல் தற்போது வரை கொடுத்து வருகின்றன. பாமக சார்பில் மக்கள் டிவி தொடங்கப்பட்டது. தமிழுக்கும் விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் கொடையை மறைமுகமாகவும், நேரிடையாகவும் செய்து வரும் இந்த சேனல், டாக்டர் ராமதாஸ், அன்புமணியின் கொள்கை, பிரச்சாரங்களுக்கு உதவியாகவே இருக்கிறது.
புதுசு கண்ணா புதுசு
இத்தனை சேனல்கள் உருவாகி வந்த நிலையில் புயலென புகுந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது புதிய தலைமுறை. புதுமையான முயற்சி, புதுமையான நிகழ்ச்சிகள், புதுமையான செய்தி களம் என எல்லாமே புதுசுதான். ஒரு நிகழ்ச்சியை லைப்-ஆக பார்க்க வைத்தது புதிய தலைமுறை செய்திதான். இது பாரிவேந்தரின் சேனல் என்று சொல்லப்பட்டாலும், இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் எல்லா தரப்பினரையும் சென்றடைந்தது. தேர்தல் சமயங்களில் மட்டும் பாரிவேந்தர் சம்பந்தப்பட்ட செய்திகள், பிரச்சாரங்கள் வந்துபோகும்.
நியூஸ் 1, நியூஸ் 18
நியூஸ் 7, நியூஸ் 18 போன்றவை எல்லாமே புதிய தலைமுறையை தழுவி வந்த சேனல்கள்தான். இதன் மாதிரியை பின்பற்றி வந்த நிகழ்வுகள்தான். என்றாலும் ஒருசில அம்சங்களில் அவை ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் திகழ்கிறது. மதிமுகவுக்கென்று மதிமுகம் உள்ளது, பாஜகவுக்கு என்று லோட்டஸ் உள்ளது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கென்று வெளிச்சம் உள்ளது. இந்த சேனல்கள் தங்கள் அரசியல் தலைவர்கள், மற்றும் தங்கள் கட்சியின் கொள்கைப்படியே செயல்பட்டு வருகின்றன. என்றாலும் இந்த சேனல்களுக்கும் நேயர்கள் கணிசமாகவே உள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
அரசியல் கட்சிகளில் சேனலே இல்லாதது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத்தான். இவர்கள் மிகவும் கொள்கை பிடிப்பு நிறைந்தவர்கள். எளிமை வாதிகள். எவ்வளவு பெரிய தலைவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டாலும் இன்றுவரை அரசு மருத்துவமனையில் தான் சேர்ந்து சிகிச்சை பெறுவார்கள். இது 50 வருட காலத்திற்கும் மேலாக இருந்து வரும் பழக்கம் ஆகும். தங்களின் கொள்கைகளை வலியுறுத்த இவர்களுக்கு நாளேடுகள், மாத இதழ்கள் உள்ளன. ஆனால் சேனல் என்று இதுவரை யோசிக்கவில்லை.
நியூஸ் ஜெ
தற்போது பல சேனல்கள் தமிழகத்தில் இருக்கிறது... ஆனால் நமக்கென்று ஒரு சேனல் இல்லையே என்று அதிமுக யோசித்து விட்டது போலும். அதனால்தான் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டு கால உள்ள நிலையில் இப்போதே துவக்கி விட்டது. இடைத்தேர்தல்கள் வரும் சமயத்தில் துவக்கிவிட்டது இதன் மற்றொரு சிறப்பு. நியூஸ் ஜெ சேனல் இனி ஜெயா டிவிக்கு இணையான செய்திகளை தரப்போகிறதா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.
குறிப்பிட்ட சேனல்கள்
தேர்தல் காலங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களுக்கென டி.வி. சேனல்களை துவக்குவது அதிகரித்து வருகிறது. அப்படித்தான் இந்த அதிமுக சேனலும் உருவாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதுதான் இந்த கட்சியின் சேனல் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், குறிப்பிட்ட சேனல்கள் கட்சி சேனல்தான் என்பது பெரும்பாலான மக்களால் ஈர்க்கப்பட்டு வருகிறது.
தேர்தல் செலவு?
பொதுவாக இப்படி அரசியல் கட்சிகள் வைத்திருக்கும் சேனல்களில் மற்ற கட்சிகளின் விளம்பரங்கள் ஒளிபரப்பாவதில்லை. அதனை வாங்கவும் மறுக்கின்றனர். தங்களது கட்சிப் பிரச்சாரத்துக்காக தங்களின் சொந்த சேனல்களையே எல்லையின்றி பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் இப்படி எல்லையின்றி பிரச்சாரத்திற்கு சேனலை பயன்படுத்தி கொள்வதில் ஒரு லாபம் உள்ளது. கடைசிவரை இவர்கள் தேர்தல் செலவு காட்டவே தேவையில்லையே!