தமிழ் நவீன கவிதைகளின் முன்னோடி கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்
சென்னை: தமிழ் நவீன கவிதைகளின் முன்னோடி கவிஞர் ஞானக்கூத்தன் (வயது 78) சென்னையில் நேற்று இரவு காலமானார்.
1938ல் மயிலாடுதுறை அருகே பிறந்த ஞானக்கூத்தனின் இயற்பெயர் ரங்கநாதன். 1968ல் கவிதைகளை எழுத தொடங்கினார் ஞானக்கூத்தன்.
இன்றைய நவீன கவிதைகளின் முன்னோடிகளில் மிக முக்கியமானவர். ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஞானக்கூத்தன் இடம்பெற்றிருந்தார்.
படைப்புகள்
அன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள் ஆகியவை அவரது படைப்புகள்.
காலமானார்
சென்னையில் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் இருக்கின்றனர்.
மனுஷ்யபுத்திரன் இரங்கல்
ஞானக்கூத்தன் மறைவு தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார் என்ற தகவல் சற்று முன் கிடைத்தது. மனம் அடையும் தடுமாற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு ஆசானின் மறைவை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.. என இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிக்கேது மரணம்?
கவிஞர் சல்மா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களது மரணம் தரும் அதிர்ச்சியும் சோகமும் இன்றைய அதிகாலையை வெறுமையானதாக மாற்றியிருக்கிறது(:-கவிக்கு ஏது மரணம்? என பதிவிட்டுள்ளார்.