துருக்கியில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் குறித்து அச்சம் தேவையில்லை - ஜெயலலிதா
சென்னை: விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க துருக்கி சென்றுள்ள 11 தமிழக மாணவர்களின் பெற்றோர் அவர்களது நிலை குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ள தேவையில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 148 மாணவர்கள் துருக்கி சென்றுள்ளனர். அவர்களில் 11 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
துருக்கியில் ராணுவப் புரட்சி தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன.
இதனால், மாணவர்களின் பெற்றோர் எவ்வித அச்சமோ கவலையோ கொள்ள தேவையில்லை. தமிழக அதிகாரிகள் இந்திய துாதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். 148 பேரும் டிராப்சோனில் பத்திரமாக உள்ளனர்.
ஜூலை 18 ம் தேதி விளையாட்டு போட்டிகள் நிறைவுற்ற பின்பு அவர்கள் நாடு திரும்புவார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கவனிக்குமாறு தமிழக அதிகாரிகளுக்கு உத்தரிவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.