மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் கிருஷ்ணசாமி மரணம்- வைகோ
தமிழக மாணவர்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அகதிகளைப் போல அலைக்கழிப்பது வலியை ஏற்படுத்துகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அகதிகளைப் போல அலைக்கழிப்பது வலியை ஏற்படுத்துகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை திருத்துறைப்பூண்டியில் இருந்து அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி, மாரடைப்பு ஏற்படடு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழக மாணவர்கள் அகதிகளைப் போல எந்த வசதியும் இல்லாமல் பரிதவிப்பது வலியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம் என்றும், முறையான வசதிகள் ஏற்படுத்தித் தராமல் மாணவர்களை அலைக்கழித்ததே கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் மீது ஏவப்படும் இந்த செயல்களைப் பார்க்கையில் நெஞ்சு வெடிக்கிறது. இதுவரை தமிழகம் இப்படி நிலையைச் சந்தித்ததில்லை, இந்த நிலை விரைவில் மாறவேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.