மாட்டு வண்டியில் பொண்ணு சரி.. அட.. அந்த மாட்டு வண்டியை ஓட்றது யாருப்பா.. ஒரு விசேஷ கல்யாணம்
தமிழ்க் கலாச்சார முறைப்படி மதுரையில் திருமணம் நடைபெற்றது.
மதுரை: இது ஒரு கல்யாண சமாச்சாரம். ஆனால் இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்தவர் காயத்ரி. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. என்ன சிறப்பு என்கிறீர்களா? திருமணத்துக்கு செல்வதற்கு முன், தமிழ் மரபு தாரை, தப்பாட்டம் முழங்கப்பட்டது.
கண்டாங்கி சேலை
இன்னொரு புறம் கால்களில் சலங்கைகள் ஜல் ஜல் என ஒலிக்க பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் என களைகட்டியது. உறவினர்கள் எல்லோரும் கண்டாங்கி சேலை அணிந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு மீனாட்சியம்மன் ஆசியில் விஜயகுமார் காயத்ரிக்கு தாலி காட்டினார். கல்யாணம் முடிந்துவிட்டது. அடுத்தது ரிசப்ஷன். அது எல்லாவற்றையும்விட சூப்பர்!
மாட்டி வண்டியில்...
மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதனால வரவேற்பு நிகழ்ச்சியே அமர்க்களமாக ஆரம்பித்தது. மணமக்கள் திருமண மண்டபம் செல்ல மாட்டு வண்டி வரவழைக்கப்பட்டது. காயத்ரி மாட்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார். ஆனால் மாப்பிள்ளை காயத்ரி பக்கத்தில் உட்காரவில்லை. ஏன்? ஏன்னா.... மாட்டு வண்டிய ஓட்டிட்டு போறதே மாப்பிள்ளைதான்! இப்படியே 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு விஜயகுமார் ஓட்டிட்டு வந்தார். இத்தனைக்கும் இவர் ஒரு என்ஜினியர். காயத்ரி பிபிஏ பட்டதாரி.
குலவை சத்தம்
ரெண்டு பேரும் மாட்டு வண்டியில் திருமண மண்டபம் வந்து சேர்ந்தனர். வண்டியை விட்டு இறங்கியதும், மண்டப வாசலில் கூடியிருந்த பெண்கள் எல்லோரும் "லுலுலுலுலு" என குலவையிட்டு அவர்களை வரவேற்றனர். அங்கு ரிசப்ஷனுக்கு மேடையெல்லாம் இல்லை. ஒரு ஓலை குடிசை அமைக்கப்பட்டிருந்தது.
ஆட்டுக்கல், சட்டிபானை
அந்த குடிலில் பெண்ணும், மாப்பிள்ளையும் வந்து உட்கார்ந்தார்கள். எல்லா உறவினர்களும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து சீர் வரிசைகள் வழங்கப்பட்டன. அவையெல்லாம் என்னென்ன தெரியுமா? அம்மிக்கல், ஆட்டு உரல், உலக்கை, சட்டி பானைகள் இதுபோன்றவைகள் மணமகனுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
சீர்வரிசை பொருட்கள்
முதலில் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் திருமண வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள். வில்லாபுரம் திருமணம் புதைந்து போன ஒரு சம்பிரதாயத்தை, மறந்து போன ஒரு கலாச்சாரத்தை மீண்டும் அசை போட்டு பார்ப்பதாகவே அமைந்துள்ளது. இந்த சீர்வரிசை பொருட்களையெல்லாம் இளம்தலைமுறைகள் பார்த்திருப்பார்களா என்று தெரியாது.
கால ஓட்டத்தில் சாத்தியமா?
ஆனால் நம் முன்னோர்கள் இப்படித்தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதையும் வாக்கப்பட்டு போகும்போது இதுபோன்ற பொருட்களை சீர்வரிசையாக எடுத்து சென்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்! ஆனால் இன்றைய நடைமுறையிலும், தற்போதுள்ள கால ஓட்டத்திலும், அவசர கதி வாழ்க்கையிலும், இதுபோன்ற திருமணங்களும், சீர்வரிசை பொருட்களும் சாத்தியமா, எடுபடுமா என்பது ஆயிரமாயிரம் சந்தேகம்தான்!