கிராமங்களில் களை கட்டிய மாட்டுப்பொங்கல்: கால்நடைகளுக்கு நன்றி
கோவை: தமிழகம் முழுவதும் கிராமங்களில் இன்று மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உழவர்கள் அதிகாலையிலேயே மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய விழாவாக கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவிற்கும், விவசாயத்திற்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் தைப் பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.
மாட்டுப்பொங்கலை ஒட்டி இன்று அதிகாலையிலேயே விவசாயிகள் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து அலங்கரித்தனர். பின்னர் ஆண்டுதோறும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசியும்,குங்குமப் பொட்டிட்டு வைத்தும் அலங்கரித்தனர்.
கோவை சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களில், இரண்டு ஆண்டுக்கு பிறகு விவசாயம் செழிப்படைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல சுத்தம் செய்து அலங்கரித்த விவசாயிகள், விளைநிலங்களில் விளைந்த பொருட்களை மிகப்பெரிய தட்டுக்களில் வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டனர். இதனையடுத்து பசு, காளை, எருமை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாடுகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட்டனர்.
கிராமங்களில் விழாக்கோலம்
விவசாயத்தில் கால்நடை பயன்பாடு குறைந்து, நவீன இயந்திரமயமாக்கல் புகுந்து விட்டது. இதனால், பால் கறவைக்கு மட்டுமே மாடுகள் வளர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. விவசாய குடும்பத்து இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி சென்றுவிட்டனர். இத்தருணத்தில், கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி, பண்டைய கலாசாரங்களை இளைய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ள, கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
விளையாட்டுப்போட்டிகள்
பொங்கல் பண்டிகையை ஒட்டி கிராமங்களில் கபடி, கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கிராமங்களில் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது.