பக்ரீத்.. தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் வாழ்த்து!
சென்னை: இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பக்ரீத் ஈகைப் பெருநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில், தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பக்ரீத் நாளில் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அரேபிய மாதம் துல்ஹஜ், பத்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது. இந்த புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது அல்லாவிற்கு பலியிடுவதாகும். பெருநாள் தொழுகை நடைபெற்ற பின்னர், வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளுக்கும் போக கையில் 5,000 ரூபாய் மிஞ்சினாலே போதும்; அதையும் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்கிறது ஷரிஅத்.
உற்றார், உறவினர், குறிப்பாக ஏழைகளை இந்நாளில் மறக்கவே கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில்தான் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த பக்ரீத் நாளில், 'இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக' என்ற உயர்ந்த, உன்னதக் கோட்பாடு கடைப்பிடிக்கப்படுவதுதான் அதன் சிறப்பாகும். பஅந்த வகையில் வறியவர்க்கு ஈந்து வாழ்வாங்கு வாழ; தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, இப்புவியெங்கும் பரந்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களை, இப்பக்ரீத் பெருநாளில் மனமுவந்து வாழ்த்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தவ்ஹீத் ஜமாத் துணை பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன்.
இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக ஆக்கி, அவரது பாதையை முன்மாதிரியாக காட்டித் தருகிறான் இறைவன்.
படைப்புகள் கடவுள் அல்ல; படைத்தவனே கடவுள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ததால் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி என அவரை முஸ்லிம்கள் போற்றுகிறார்கள். ஆயுதத்தை அவர் கையில் ஏந்தவில்லை; அறிவாயுதத்தை ஏந்தினார். மூட நம்பிக்கை களை அறிவுப்பூர்வமான வாதங்கள் மூலம் தகர்த்தெறிந்தார்.
சாதி, மதம், இனம், மொழி, பணக்காரன், ஏழை என எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல் உலகளாவிய சகோதரத்துவத்தை, ஒற்றுமையை வலியுறுத்தும் சர்வதேச மாநாடான ஹஜ் கடமை நபி இப்ராஹீம் குடும்பத்தை மையப்படுத்தியே இன்று முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகிறார்கள். அதனால்தான் இப்ராஹீம் நபியை தனி மனிதர் என்று கூறாமல் அவர் ஒரு சமுதாயம் என இறைவன் அடையாளப்படுத்துகிறான்.
உலகம் இன்று அமைதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. சாதி, மத ஏற்றத்தாழ்வுகள், உயிர் பலிகள், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை, பொருளாதார சுரண்டல், மத மோதல்கள், சுயநல அரசியல், மனித உரிமை மீறல்கள் என மனித விரோத செயல்கள் மலிந்து போனதால் பூமிப் பந்தில் அமைதி தொலைந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைதி தொலைந்து போக காரணமான மனித குல விரோதிகளை அடையாளம் கண்டு வேரறுப்போம். வகுப்புவாத சக்திகளை இனம் கண்டு தனிமைப்படுத்துவோம். பயங்கர வாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வீழ்த்த தியாகம் செய்வோம். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அறப்போர் புரிவோம். இந்தியா ஜனநாயக தன்மையை இழந்துவிடாமல் காக்கும் பணியில் நம்மை அற்பணிப்போம். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய, அமைதியும், நல்லிணக்கமும், ஒற்றுமை உணர்வும் தழைக்க இந்த தியாக திருநாளில் உறுதி ஏற்போம்" என்று தெரிவித்துள்ளார்.