வெட்டப்போகும் ஆட்டுக்குக் காட்டும் தழைதான் 'நீட்' விலக்கு... தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
வெட்டப்போகும் ஆட்டுக்கு தழையைக் காட்டும் கருணைதான் 'நீட்' தேர்வுக்கு வழங்கப்படும் ஓராண்டு விலக்கு என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது தமிழக வாழ்வுரிமை கட்சி.
சென்னை: வெட்டப்போகும் ஆட்டுக்கு தழையைக் காட்டும் கருணைதான் 'நீட்' தேர்வுக்கு வழங்கப்படும் ஓராண்டு விலக்கு என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை!
வெட்டப்போகும் ஆட்டுக்குக் காட்டும் தழைதான் இந்த நீட்-விலக்கு அவசரச் சட்டம்!
இது கூட்டாட்சி - மாநில உரிமை மற்றும் சமூக நீதிக்கு இட்ட கொள்ளி என குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
நடுவண் பாஜக மோடி அரசு கொண்டுவந்த மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான "நீட்"டை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் அடையாளமாகத்தான் தமிழக சட்டமன்றம் நீட்டை விலக்கும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியது.
ஆனால் மோடி அரசு அதில் எந்த முடிவையும் எடுக்காமல் மசோதாவைக் கிடப்பில் போட்டது. குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அந்த மசோதா அனுப்பப்படாதது ஆறு மாதங்களுக்குப் பின்தான் தெரியவந்தது. இந்தத் தகவலும்கூட மார்க்சிஸ்ட் கட்சி எம்பி ரங்கராஜன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகவே பெறப்பட்டது. இத்தனை காலமாக எடப்பாடி அரசும்கூட எதுவுமே செய்யாமல்தான் இருந்தது.
நீதிமன்றம் திட்டவட்டம்
எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கிய பிறகே டெல்லி செல்வதும் நடுவண் அமைச்சர்களை சந்திப்பதுவுமாக காட்டிக் கொண்டது எடப்பாடி அரசு. கடைசியில் நீட்டுக்கு விலக்கில்லை என்று நீதிமன்றம் திட்டவட்டமாகவே கூறியது.
எதிர்ப்பு வலுத்துள்ளது
இதன் மூலம் மோடி அரசுதான் எடப்பாடி அரசு என்பது வெட்டவெளிச்சமானது. ஏற்கனவே இருந்துவரும் இந்த இரண்டு அரசுகளுக்குமான எதிர்ப்பு இப்போது மேலும் வலுவடைந்துவிட்டது.
ஆவன செய்யும் மத்திய அரசு
இந்த நிலையில்தான் "தமிழக அரசு அனுப்பிய நீட்-விலக்கு மசோதா எங்கு உள்ளதென்றே தெரியாது" என்று சொன்ன நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமனே "நீட் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவந்தால் ஆவன செய்வோம்" என்றார். நடுவண் அரசின் வழக்கறிஞர் வேணுகோபாலும் "நீட் தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவர சட்டத்தில் இடம் உள்ளது" என்றார்.
உரிமையை ஏற்பார்களா?
நீட் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்பது இவர்கள் சொல்லித்தானா தெரியவேண்டும்? ஆனால் அந்த உரிமையை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் கேள்வி.
ஆட்டுக்கு கருணை
தற்போது ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருக்கும் இவர்கள் ஓராண்டுக்குத்தான் நீட்டுக்கு விலக்கு என்றும் சொல்லியிருப்பது ஏன்? இது வெட்டப் போகும் ஆட்டுக்கு தழையைக் காட்டும் கருணைதானே தவிர வேறல்ல.
தேவை நீட்டுக்கு நிரந்தர விலக்கு
நிரந்தரமாக நீட்டுக்கு விலக்கு என்பதுதான் தமிழகத்தின் மனது. ஓராண்டுக்கு மட்டும் விலக்கு என்பது தூக்குக்கு ஒரு நாளைத் தள்ளிப்போடும் போலி கருணையே. எனவே இது கூட்டாட்சி - மாநில உரிமை மற்றும் சமூக நீதிக்கு இட்ட கொள்ளி என குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி." என்று கூறியுள்ளார் வேல்முருகன்.