தற்காத்து கொள்ள மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்: வேல்முருகன் ஆவேசம்
சென்னை: இலங்கை கடற்படையினரிடம் இருந்து தற்காத்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 96 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 86 படகுகளை விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய வேல்முருகன், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றும் முதலுமாக பாதிக்கப்பட்டதாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஆனால், எங்களை ஆளுகின்ற இந்திய அரசு இது குறித்து சற்றும் கவலை படவில்லை. தமிழக மீனவர்களின் போராட்டங்களை ரசிக்கின்ற வகையில் ஈடுபட்டு வருகின்றது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்றுத்தர இந்திய அரசு மறுக்கின்றது.
அதற்கு ஒரே ஒரு தீர்வு கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சியினரின் நிலைப்பாடு, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர்களை விடுதலை செய்ய கோரி பல கடிதங்கள் எழுதி உள்ளார். ஆனாலும் மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது. இனியாவது மத்திய அரசு தமிழக மீனவர் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் விடுதலைக்கு வழி காண வேண்டும். கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்க வந்தால் தற்பாதுகாத்துக்கொள்ள தமிழக மீனவர்களுக்கு பயிற்சி அளித்து நவீன ரக ஆயுதங்களை தமிழக மீனவர்களுக்கு அளித்து இந்திய ராணுவம் அவர்களின் உயிர்களையும் உடைமைகளையும் வலைகளையும் படகுகளையும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.