வேல்முருகன் மீது அடுத்தடுத்த வழக்குகள் ஏன்?! - அதிர்ச்சி பின்னணி
வேல்முருகன் மீது அடுத்தடுத்த வழக்குகள் ஏன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
Recommended Video
சென்னை: வேல்முருகன் மீது தொடரப்படும் அடுத்தடுத்த கைதுகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர். ' குரு மரணத்துக்குப் பிறகு வன்னியர் சங்க இளைஞர்களிடையே வேல்முருகனுக்கு ஆதரவு பெருகியுள்ளது. அதை மடைமாற்றும் வேலையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது' என்கின்றனர் த.வா கட்சியினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற வேல்முருகனை, உளூந்தூர்பேட்டை சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்தது போலீஸ். காவல்துறை அதிகாரிகள் தம்மை மரியாதைக்குறைவாக நடத்தியதாக கட்சி நிர்வாகிகளிடம் வேதனை தெரிவித்திருந்தார் வேல்முருகன்.
இந்நிலையில், நீர்ச்சத்து குறைவு மற்றும் சிறுநீர் பிரச்னை காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வேல்முருகன். அவரை சந்தித்த நெய்வேலி தெர்மல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராமதாஸ், காவிரி பிரச்னை தொடர்பான போராட்டத்தின்போது நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய வகையில் 124 (ஏ), 153, 153 (ஏ)(1)(பி) மற்றும் 505 (1)(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், கைது செய்ய வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
சீமான், டிடிவி
அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படுவதை வேல்முருகனும் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், " வேல்முருகனுக்கு மட்டுமல்ல, சீமான், டி.டி.வி ஆகியோருக்கும் இதே நிலைதான்.
நேரம் வரும் போது
கோவையில் நடந்த அ.ம.மு.க கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறையொட்டி, தினகரன் அணி நிர்வாகிகள் 60 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ம.தி.மு.க பிரமுகர்கள் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார் சீமான். இவர்களது நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நேரம் வரும்போது கைது நடவடிக்கை பாயும்.
இளைஞர்கள் தீவிரம்
அதேநேரம், வேல்முருகன் கைது விவகாரத்தில் வேறு சில காரணங்களும் இருக்கின்றன. பா.ம.கவைப் பொறுத்தவரையில் வன்னியர் சங்கம்தான் அதன் அடிநாதம். காடுவெட்டி குரு உயிரோடு இருந்தவரையில், இந்தச் சங்கத்தின் இளைஞர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர்.
உள்விவகார மோதல்
மாமல்லபுரத்தில் நடக்கும் சித்திரை திருவிழாவில் அரங்கேறிய காட்சிகள் எல்லாம் குருவின் கட்டளைப்படி நடந்தவைதான். அதேநேரம், குருவின் கடைசி நாள்களை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் சங்கத்தின் இளைஞர்கள். ' இன்னும் சிறப்பான சிகிச்சை கொடுத்து குருவைக் காப்பாற்றியிருக்கலாம்' என்பது அவர்கள் எண்ணம். தவிர, பா.ம.கவுக்குள் நடந்து வந்த உள்விவகார மோதல்களையும் அவர்கள் தீவிரமாகக் கவனித்து வந்தனர்.
அடுத்தடுத்த வழக்குகள்
குருவின் திடீர் மரணம் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. இந்த இளைஞர்களில் பலர் வேல்முருகன் பின்னால் அணிவகுக்கத் தயாராகி வருகின்றனர். இப்படியொன்று நடந்தால், அது வடபுலத்தில் மோதல்களை உருவாக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த அறிக்கைதான், வேல்முருகன் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்வதற்குக் காரணம்" என்றார் விரிவாக.