தமிழகத்தில் இந்தியை திணிக்கும் தனியார் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்: தமிழர் பண்பாட்டு நடுவம்
சென்னை: தமிழகத்தில் இந்தியை திணிக்கும் தனியார் நிறுவனங்களை அதிமுக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் ராச்குமார் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த சில காலங்களாக பல தனியார் நிறுவனங்கள் தமிழக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இந்தி மொழியில் விளம்பரம் செய்து வருகின்றன. இந்திய தொடர்வண்டித்துறை தமிழ் நாளிதழ்களில் நேரடியாக இந்தி மொழியில் மட்டுமே விளம்பரங்கள் செய்து வருகிறது. பல இந்திய அரசு வங்கிகளும் இந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே விளம்பரம் கொடுத்து வருகின்றன.
அண்மையில் தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில நாளிதழில் ஆம் ஆத்மி கட்சி இந்தி மொழியில் முழுபக்க விளம்பரம் கொடுத்தது. இப்படியாக தனியார் நிறுவனங்களும், இந்திய அரசு நிறுவனங்களும், இந்தி அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் இந்தியை போட்டி போட்டுக் கொண்டு திணித்து வருகின்றன. வட மாநில நாளிதழ்களில் நாம் இந்தி, ஆங்கிலம் தவிர்த்த எந்த விளம்பரங்களையும் பார்க்க இயலாது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி தொடர்ச்சியாக திணிக்கப்பட்டு வருகிறது.
இணைய வணிகம் செய்யும் பிளிப்கார்ட் என்ற நிறுவனம் தமிழ் நாளிதழின் முதல் பக்கத்திலேயே இந்தி மொழியில் விளம்பரம் செய்கிறது. இத்தகைய நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியதாகும். 1976 இந்திய அலுவல் மொழி சட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது என தெளிவாக குறிப்பிடப்பட்ட பின்னரும் தனியார் நிறுவனங்களும், இந்திய அரசு நிறுவனங்களும் தமிழை புறக்கணித்து இந்தியை தமிழகத்தில் திணித்து வருகின்றன. தமிழை பயன்படுத்தாமல் இந்தியையும், ஆங்கிலத்தையும் மட்டுமே திணிக்கும் தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் வணிகம் செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இந்தியை திணிக்கும் இந்திய அரசு நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆலோசனையும் எச்சரிக்கையும் வழங்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் தொடர் இந்தித் திணிப்பை கண்காணிக்க இந்தித் திணிப்பு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இந்த குழு எங்கெல்லாம் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி திணிக்கப்படுகிறது என்பதை கண்காணித்து அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக மக்களின் மொழி உரிமைகள் இனியும் பறிபோகாமல் இருக்க தமிழக அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.