கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார் கூறிய தமிழரசியின் தம்பி தற்கொலை முயற்சி!
பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவர் தமிழரசி. மூன்று தலைமுறையாக தி.மு.க.வுக்காக பாடுபட்டு வரும் இவரது குடும்பத்தினர், நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனை கடந்த மாதம் சந்தித்து தமிழரசிக்கு கட்சி பொறுப்பு வழங்க கோரியுள்ளனர்.
இதையடுத்து, குற்றாலத்தில் உள்ள தனது பங்களாவுக்கு கருப்பசாமி பாண்டியன் அழைத்ததாகவும், அங்கு, தன்னிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கருப்பசாமி மீது தமிழரசி புகார் தெரிவித்தார்.
இதில் கருப்பசாமி பாண்டியன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தமிழரசிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், கட்சி தலைமை மீது வெறுப்படைந்தவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தற்கொலை முயற்சி
இந்நிலையில், தமிழரசியின் தம்பி குரலமுதன் மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி தமிழரசி நம்மிடம் கூறுகையில், கடந்த 2 தினங்களாகவே எனது தம்பி மிகுந்த மனச்சோர்வுடன்தான் இருந்தான். கட்சியினரும் மற்றவர்களும் என்னை பற்றி அவதூறு பேசுவதால் வருத்தத்தில் இருந்தான். தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வருவதும் அவனை வேதனைப்படுத்தியுள்ளது.
தனி குடும்பமாக வசித்து வந்த அவன் எதற்காக தற்கொலைக்கு முயன்றான் என்று தெரியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார். தமிழரசியின் தம்பி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், நெல்லை தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.