ரஜினி மீதான விமர்சனங்களுக்கு மே 20 ம் தேதி பதில் சொல்வேன்! - தமிழருவி மணியன்
வேலூர்: ரஜினிகாந்த் குறித்த கேள்விகள், விமர்சனங்கள் அனைத்துக்குமான பதிலை வரும் மே 20-ம் தேதி சொல்வேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது.
ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் காலையில் திறந்துவைத்தார். மாலையில் காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "எத்தனையோ ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்னை அணுகி ரஜினி பற்றிக் கேட்டார்கள். கேட்கிறார்கள். 'அவர் (ரஜினி) இதற்கு பதில் சொல்ல மறுக்கிறாரே... இது பற்றிப் பேச மறுக்கிறாரே என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள். நான் எதற்கும் இப்போது பதில் சொல்ல மாட்டேன். எல்லா பதிலையும் வரும் மே 20 ம் தேதி, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் கோவையில் கொடீசியா மைதானத்தில் சொல்லப் போகிறேன். அங்குதான் தமிழகத்தின் முதல் அமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கம் முன்னிறுத்தப்போகிறது.
அங்குதான் யாரெல்லாம் ரஜினிகாந்தை விமர்சித்து கேள்விகளை
முன்வைத்துள்ளார்களோ, அவர்களுக்கான பதில்களைச் சொல்லப் போகிறேன். இடையில் எங்கேயும் நான் வாய் திறப்பதாக இல்லை.
இந்த மாநாடு என்பது டீசர்தான். காலா படத்துக்கு ரஜினிகாந்த் விட்ட டீசர் மாதிரி. ரஜினிகாந்தே தன் கட்சி, கொடியை அறிமுகப்படுத்தும் பிரமாண்ட விழாதான் மெயின் பிக்சர்.. அன்று தமிழகத்தைப் பிடித்த பீடைகள் அனைத்தும் ஒழியப் போகிறது... மக்களுக்கான நல்லாட்சி ரஜினி தலைமையில் மலரப்போகிறது," என்றார்.
மே 20 ம் தேதி கொடீசியா மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் தமிழருவி மணியன். அந்த மாநாட்டில் வைத்துதான் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வராக முன் நிறுத்திப் பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.