காந்திய வழியில் நடக்க விரும்பும் ரஜினிக்கு ஆதரவாக இருப்போம்... தமிழருவி மணியன்
காந்திய வழியில் நடக்க விரும்பும் ரஜினிக்கு காந்திய மக்கள் இயக்கம் துணை நிற்கு் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை: காந்திய வழியில் நடக்க விரும்பும் ரஜினிக்கு காந்திய மக்கள் இயக்கம் துணை நிற்கு் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். ரஜினி மராட்டியர் என்பதால் அவர் தமிழகத்தை ஆளக் கூடாது என்று தமிழ் அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தெரிவித்தன.
இந்நிலையில் ஒரு சிலர் அவர் அரசியலுக்கு வருகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் அவருக்கான எதிர்ப்புகள் தேவையற்றது என்று தெரிவித்தனர்.
கணிப்புதான்
ரஜினி இன்னும் அறிவிக்காவிட்டாலும் அவரது நண்பர் ராஜ் பகதூர், அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் உள்ளிட்டோர் அளித்த தகவல்களை பார்க்கும் போது இது நிச்சயம் ரஜினியின் கருத்தாகதான் இருக்க முடியும் என்று கணிக்கும் நிலை உள்ளது.
ஏற்பாடுகள் தயார்
வரும் ஜூலையில் புதிய கட்சித் தொடங்க உத்தேசித்துள்ள ரஜினி அதற்கான பெயர், கட்சிக்கொடி ஆகியவற்றை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்று முதல்கட்டமாக மூத்த பத்திரிகையாளர்களுடன் தனது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழருவி மணியன்
அதேபோல் நடிகர் ஆனந்த் ராஜும் ரஜினியை சந்தித்தார். மேலும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜ் ஆகியோரை ரஜினி அழைத்து பேசினார்.
காந்திய வழியில்....
இதுகுறித்து திருப்பூரில் தமிழருவி மணியன் தெரிவிக்கையில், ரஜினியின் வீட்டுக்குள் நுழைந்தவுடன் பெரிய அளவிலான காந்தியின் படத்தை வைத்துள்ளார். மேலும் காந்தியின் கொள்கைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். அவர் விவேகானந்தரால் தான் ஈர்க்கப்பட்டது குறித்தும் அதன் பாதிப்பு குறித்தும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அரசியலுக்கு வருவதில் தெளிவாக உள்ளார்.
சினிமா பிரமோஷன் இல்லை
வழக்கமாக ரஜினி தன் சினிமா படம் வெளியாகும் நேரத்தில் இதுபோன்ற பரபரப்பை ஏற்படுத்துவார். பின்னர் சினிமா வெளியானதும் அடங்கிவிடுவார் என்று ஓயாது குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது ரஜினியிடம் நான் பேசியதிலிருந்து அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். வந்து ஊழலற்ற நல்ல ஆட்சியை தருவார். அவருக்கு காந்திய மக்கள் இயக்கம் துணை நிற்கும்.
நேரத்தை செலவிடுவார்
ஊழலற்ற அரசியல் அமைப்பை தர அவர் உழைப்பையும், நேரத்தையும், வியர்வையையும் செலவழிப்பார். அவர் என்னிடம் தமிழக அரசியல் குறித்தும், தேசிய அரசியல் குறித்தும் மனம் திறந்து பேசினார் என்றார் தமிழருவி மணியன்.