ஓமனில் உணவின்றி தவிக்கும் நெல்லை தொழிலாளர்கள்... பெற்றோர் மீட்க கோரிக்கை
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பலர், ஓமனில் உணவு இல்லாமலும் வேலை இல்லாமலும் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சேர்ந்த ஓமன் நாட்டில் வேலையும் உணவுமின்றி தவித்து வருவதால் அவர்களை மீட்க வேண்டும் என அவர்கள் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமன் நாட்டில் இயங்கி வரும் அல்பாஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தில் பிளம்பர், மேசன், கார்பெண்டர், பெயிண்டர் உள்ளிட்ட வேலைகளுக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றனர்.
இதற்காக இவர்கள் சென்னையில் உள்ள 'ஸ்கைலேக்' நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் கட்டினர். ஓமன் நாட்டுக்கு செல்பவர்களிடம் வாரத்தில் 6 நாட்கள் வேலை, அதிக ஊதியம், கூடுதல் வேலை செய்தால் தனி ஊதியம் என்று கூறி 'ஸ்லைலேக்' நிறுவனம் அவர்களை அனுப்பி வைத்தது.
ஆனால் அங்கு சொன்னது போல வேலை தராமல் வேறு வேலைகளைத் தந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஊதியம் மிகக் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேலை செய்ய மறுத்தவர்கள் அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 'வாட்ஸ் ஆப்' மூலம் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் மற்றும் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த தகவலால் அவர்களது குடும்பத்தினர் நிலை குலைந்து போய் உள்ள அவர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டுமென மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.