ஆண்டவரே... நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல.. நம்ம ஊர் "ஆண்டவருக்கு"த்தான்... தமிழிசை
கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, நம்ம ஊர் சாமிக்குத்தான் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: கபினியில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு நன்றி சொல்ல வேண்டியது நம்ம ஊர் சாமிக்குத்தானே தவிர குமாரசாமிக்கு அல்ல என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கபினி அணைக்கு வரும் நீர் வரத்து மிக அதிகம் ஆகும்.
அதிக நீர்
அதிகப்படியான நீரை கர்நாடகா கபினியில் இருந்து திறந்துவிட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கன அடி நீரை கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு திறந்து விட்டிருந்தது. இந்நிலையில், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகப்படியாக வந்தபடி உள்ளதால், நேற்று வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
போனில் நன்றி
இதையடுத்து இன்று 2-ஆவது நாளாக வினாடிக்கு 35, 000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் குமாரசாமிக்கு போனில், கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
|
தண்ணீர் கொடுக்கவில்லை
மழை பெய்ததால் வேறு வழியின்றி தண்ணீர் திறந்து விட்டதற்கு கமல் நன்றி கூறியதை தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில் கர்நாடகத்தை ஆள்பவர் தண்ணீர் கொடுக்கவில்லை.
நன்றி
ஆண்டவன் (ரங்கநாதர்) கொண்டு வந்த மழையால்தான் தண்ணீர் வந்திருக்கிறது.கமல் நன்றி சொல்லவேண்டியது குமாரசாமிக்கு அல்ல!நம்ம ஊர் சாமிக்குத்தான்.... என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.