எதிர்மறை அரசியல் செய்பவர்களே ரதயாத்திரையை எதிர்க்கின்றனர்... தமிழிசை பொளேர்!
தமிழகத்தில் எதிர்மறை அரசியல் செய்ய நினைப்பவர்களே ரத யாத்திரையை தடுப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
ஆம்பூர் : தமிழகத்தில் எதிர்மறை அரசியல் செய்ய நினைப்பவர்களே ரத யாத்திரையை தடுப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும். எதிர்மறையான அரசியலுக்கு இடம் இல்லை என்பதை ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் அதிகம் செய்யப்பட்டுள்ளது. உதான் திட்டம், பசுமைப் பாதை மூலம் சென்னையில் இருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் சென்றடையலாம்.
சேலம், வேலூர் உள்ளிட்டவை நவீன நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வேலூரில் விமான நிலையம் அமைய உள்ளது. மத்திய அரசு என்ன செய்தது என்று எங்களால் பட்டியலிட முடியும். காங்கிரஸ், திமுக ஆட்சியில் என்ன நல்லது தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது என்று பட்டியலிட முடியுமா. ஆனால் எங்களால் பட்டியலிட முடியும், தொடர்ந்து பாஜக மீது அவதூறு பரப்பப்படுகிறது.
தமிழைப்பற்றியும், தமிழகம் பற்றியும் கவலைப்படவில்லை என்று கூறுகிறார்கள், இன்று தமிழையும் தமிழகத்தையும் தூக்கிப் பிடிப்பது பாஜக தான். தமிழகத்தில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றத்தை பாஜகவால் தான் தரமுடியும் என்பது தான் இந்த யாத்திரை.
இந்துக்கள் எப்போதும் அமைதியில் நம்பிக்கை உள்ளவர்கள். அமைதியான ரதயாத்திரையை எதிர்க்க வேண்டாம் என கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். நேர்மறையான அரசியல் செய்யும் பாஜகவை மற்றவர்கள் எதிர்மறையாக பார்க்கின்றனர். பாஜக தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதில் முதன்மை கட்சியாக இருக்கிறது. காவிரி விவகாரத்தில் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என்று தமிழக அரசே சொல்லிவிட்டது. ஆனால் அந்த பொறுமை ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை.
ரதயாத்திரையை ஏன் எதிர்க்கிறார்கள்? 85 சதவீத மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவுடன் ரதயாத்திரை நடைபெறும். ரதம் அமைதியாக எல்லா மாநிலங்களிலும் கடந்து வந்துள்ளது, தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள், இந்து மதம் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாதா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.