தமிழக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி கோரும் சு.சுவாமி- தமிழிசை 'எஸ்கேப்' பதில்
சென்னை: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தக் கோரும் பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை குறித்து தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறி தப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். அங்கு மருத்துவர்களை நேரில் சந்தித்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
முதல்வர் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் பூரண குணமடைந்து விரைவில், வீடு திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
அதிமு்க தொண்டர்களும், மக்களும் செய்யும் பிரார்த்தனை நிச்சயம் பலனளிக்கும். மிகவும் துணிச்சலான முதல்வர், பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டதைப் போன்று, உடல் ரீதியான சவால்களையும் எதிர்கொண்டு மீண்டும் வந்து பணியை தொடர்வார்.
மருத்துவ ரீதியாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வருவது குறித்து எந்த தகவலும் இல்லை. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளது குறித்து பதில் கூற விரும்பவில்லை.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.