வைகோவுக்கு ஏன் தடை? - மலேசியாவிடம் விளக்கம் கேட்க சுஷ்மாவுக்கு தமிழிசை கோரிக்கை
சென்னை: மலேசியா சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அந்த நாட்டு அரசு தடுத்து திருப்பி அனுப்பியது குறித்து இந்தியா விளக்கம் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்து சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மலேசியாவுக்குப் போயிருந்தார் வைகோ. ஆனால் அவரை அபாயகரமானவர்கள் பட்டியலில் சேர்த்த மலேசிய அரசு வைகோவை விடுதலைப் புலி என்று முத்திரை குத்தி நாட்டுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழிசையும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ம.தி.மு.க. தலைவர் வைகோ மலேசியாவில் நடத்தப்பட்ட விதம் கண்டிக்கத்தக்கது. முதலில் விசா வழங்கி விட்டு பின்பு தடுப்பது சரியான நடவடிக்கை அல்ல.
அவர் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். மலேசிய அரசிடம் இதற்கான விளக்கம் கேட்க வேண்டும் என்று தமிழிசை கோரிக்கை விடுத்து கடிதம் போட்டுள்ளார்.