40-தான் தருவேன்... இது ஜெ. ஆட்சிக்கு தமிழிசை போடும் மார்க்!
சென்னை: ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டு ஆட்சிக்கு நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் வழங்கலாம் என்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
விரைவில் சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது தமிழகம். எந்தக் கட்சி யாரோடு கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
இந்நிலையில், விகடனுக்கு பேட்டியளித்துள்ளார் தமிழிசை சவுந்திரராஜன். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எல்லாம் கலந்த கலவை நான்...
அகில இந்திய அளவில் பாஜகவின் பெண் தலைவர் நான் மட்டும் தான். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களை ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கலைஞரின் அரசியல் சாதுர்யமும், ஜெயலலிதாவின் துணிச்சலும், ராமதாஸின் மக்கள் அக்கறையும், வைகோவின் பேச்சாற்றலும், விஜயகாந்தின் மக்கள் செல்வாக்கும்... இவை அனைத்தும் கலந்தவள் தான் இந்த தமிழிசை.
காணொலி முதலமைச்சர்...
அதிமுகவின் இந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் பல மைனஸ்கள் இருக்கின்றன. முதலமைச்சர் எளிதில் காண முடியாத காணொளி முதலமைச்சராக இருப்பது தான் பெரிய மைனஸ்.
லஞ்சம், ஊழல்...
லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளன. கிரானைட் கொள்ளை, மணல், கனிமக் கொள்ளை எதையுமே தடுக்கவில்லை.
100க்கு 40 மார்க்...
ப்ளஸ் என்றால் அம்மா உணவகங்கள், மருந்தகங்கள், பிறந்த குழந்தைகளுக்கு 16 வகையான இலவசப் பொருட்கள்னு சிலவற்றைச் சொல்லலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 100க்கு 40 மதிப்பெண்கள் வழங்கலாம்' என்கிறார்.
நேரில் பார்த்தால்...
அதோடு, ஜெயலலிதாவைச் சந்தித்தால் உண்மையாக மக்கள் முதல்வராக இருந்தால் என்ன? என்றும், கருணாநிதியைச் சந்தித்தால் இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் இவ்வளவு தீவிர ஆர்வத்துடன் அரசியல் ஈடுபடுகிறீர்கள் என கேட்பாராம் தமிழிசை.
சிரிச்சுட்டாரு மோடி...
அதேபோல பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, எத்தனை இடங்களில் பாஜக ஜெயிக்கும் என்று கேட்டபோது, தமிழிசை கூறிய பதிலைக் கேட்டு மோடி வாய் விட்டுச் சிரித்து விட்டாராம்.