வைகோவுடன் தமிழிசை சந்திப்பு... மகன் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது மகனின் திருமண அழைப்பிதழை வைகோவிடம் வழங்கினார் தமிழிசை.
தமிழிசை சவுந்தரராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் நாளை காலை 9 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திருமணம் நடைபெறவுள்ளது. நாளை மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நடக்கவுள்ளது.
இந்த திருமண விழாவுக்கான அழைப்பிதழை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி வருகிறார். முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை தமிழிசை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இல்லத்துக்கு சென்று மகன் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார் தமிழிசை.