ஏன் இலங்கைக்குப் போனார் தமிழிசை?
சென்னை: பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசையின் பயணம், வழக்கம்போல உள்கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தலைமை தமிழிசையை நம்புகிறது. பொன்.ராதாகிருஷ்ணனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேயே இலங்கைப் பயணத்துக்கு வழியனுப்பி வைத்தனர் என பாஜக தரப்பிலேயே சொல்கிறார்கள்.
தமிழக மீனவர்களின் பிரச்னை குறித்து, இலங்கை அரசின் பிரதிநிதிகளிடம் விவாதிக்க கடந்த புதன்கிழமை இலங்கை சென்றார் தமிழிசை. இந்தப் பயணத்தில் யாழ்பாணத்துக்கு அவர் சென்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனையும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து பேட்டியளித்த தமிழிசை, 'மரியாதை நிமித்தமாக முதல்வர் விக்னேஷ்வரனை சந்தித்தேன். அவருக்கு பிரதமர் மோடி எழுதிய புத்தகம் ஒன்றை பரிசளித்தேன். தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறோம். விரைவில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாகவும் தெரிவித்தார் எனக் கூறினார்.
பதவியை விட்டு இறக்க பிரயத்தனம்
தமிழிசையின் இலங்கை பயணம் குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், தமிழக தலைவராக இரண்டாவது முறையாக பதவியில் நீடிக்கிறார் தமிழிசை. அவரைத் தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்கு, இங்குள்ள சிலர் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் அவரைக் கடுமையாக விமர்சித்தார். தற்போதுள்ள ஆட்சியையும் அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால், இதற்கு நேர்மாறாக பா.ஜ.கவில் உள்ள சிலர் செயல்படுகின்றனர்.
அதிமுக உறவை விரும்பும் சிலர்
அ.தி.மு.க அமைச்சர்களுடன் வர்த்தகரீதியான உறவை வைத்துக் கொண்டு, முதல்வரையும் சந்தித்துப் பேசுகின்றனர். தமிழிசையின் நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க தலைமை விரும்புகிறது. இதனை விரும்பாத பொன்னார், கடந்த மாதம் டெல்லி பா.ஜ.க தலைமைக்கு சில தகவல்களை அனுப்பினார்.
என்ன செய்தார் தமிழிசை..!
அதில், தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து ஒரு முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏவையாவது அவர் கட்சியில் சேர்த்திருப்பாரா? கட்சியின் வளர்ச்சிக்காக அவர் என்ன செய்துவிட்டார்? தொலைக்காட்சி மைக்கில் பேசினால் மட்டும், கட்சி வளர்ந்துவிடாது எனக் காட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் கட்சித் தலைமை இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம்.
அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு
கட்சியில் தமிழிசையின் செயல்பாடுகள் நன்றாகத்தான் இருக்கிறது என சான்றிதழ் கொடுத்துவிட்டது. இதற்கும் ஒருபடி மேலே போய், 'இலங்கைக்கு நீங்கள் பயணம் செய்யுங்கள்' எனவும் தமிழிசையைக் கேட்டுக் கொண்டதாம் மேலிடம். தமிழ்நாட்டில், பா.ஜ.கவுக்கு என ஓர் இணை அமைச்சர் இருக்கும்போது, மாநிலத் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பொன்னார் விரும்பவில்லை. தமிழிசையை பழி தீர்க்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்றார் விரிவாக.
திட்டம் போட்ட அமித் ஷா
பொதுவாக, எந்த மாநிலத்துக்கு செல்வது என்றாலும் துல்லியமாக திட்டம் போட்டுவிட்டுத்தான் அமித் ஷா செல்வார். தமிழ்நாட்டில் அவருடைய வருகை ரத்தானதற்குக் காரணம், இங்குள்ள பா.ஜ.க தலைவர்களின் கோஷ்டி மோதல்கள்தான். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் கட்சி முன்னேறும் என தலைமை தொடர்ந்து கூறிவருகிறது. அதைக் கேட்கும் மனநிலையில்தான் யாரும் இல்லை என்கிறார் பா.ஜ.கவின் தலைமை நிலைய நிர்வாகி ஒருவர்.