திருச்செந்தூர் கோயில் விபத்து நிர்வாகமே பொறுப்பு ... தமிழிசை பேட்டி
திருச்செந்தூர் கோயில் விபத்துக்கு கோயில் நிர்வாகமே பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்ததற்கு கோயில் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் பேச்சியம்மாள் என்ற பெண் இறந்துள்ளார்.
இந்த இடம் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வரக்கூடிய இடமாகும். மண்டபம் இடிந்த போது பக்தர்கள் யாரும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பலியான பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும்.
அவரது குழந்தைகளின் நிரந்தர வருமானத்திற்கு அறநிலைய துறையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த கோயிலில் பாதுகாப்பில்லை.
இந்து சமய அறநிலையத்துறை கவனம் செலுத்தியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே இந்த சமய அறநிலையத்துறை எடுத்து கொள்கிறது. ஆனால் கோயிலை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
பிரகார மண்டபம் கட்டி கொடுக்க தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. கோயில் நிர்வாகம் மண்டபத்தை முழுமையாக இடித்து விட்டு நல்ல முறையில் கட்டி கொடுக்க வேண்டும். கவர்னர் ஆய்வை குறை கூறுகின்றனர். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டுவது வரம்பு மீறிய செயல். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.