சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது பற்றி தமிழிசை என்ன சொல்கிறார் தெரியுமா?
சென்னை: சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது, வழக்கை திசை திருப்பும் செயல் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில், தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழிசை.
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது, வழக்கை திசைதிருப்பி முடக்குவது போல் உள்ளது. பொன்.மாணிக்கவேலுக்கு போதிய அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில், மத்திய அரசு தெளிவான நடைபோட்டு வருகிறது. பட்டியல் இன மக்கள் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக, தங்கள் கருத்தை உச்சநீதிமன்றத்தில் வலிமையாக பதிவு செய்துள்ளது. பாஜக அரசு அந்த சட்டத்தை திருத்த முயல்வதை போல தோற்றத்தை ஏற்படுத்தி திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர் என்றார் தமிழிசை.