கலாம் பொதுவானவர்னா சிலைக்கு கீழே பகவத் கீதையை வைத்தது ஏன் தமிழிசை மேடம்?
அனைவருக்கும் பொதுவான அப்துல் கலாம் வீட்டில் இருந்து கமல் கட்சி தொடங்குவதை ஏற்க முடியாது என்று சொல்லும் தமிழிசை அவரது சிலைக்குக் கீழே பகவத் கீதை வைத்ததை மட்டும் ஏன் வசதியாக மறந்துவிட்டார்.
சென்னை : அனைவருக்கும் பொதுவான அப்துல் கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கலாம் வீட்டில் இருந்து கமல் கட்சி தொடங்குவதை ஏற்க முடியாது என்று சொல்லும் தமிழிசை அவரது சிலைக்குக் கீழே பகவத் கீதை வைத்ததை மட்டும் ஏன் வசதியாக மறந்துவிட்டார் என்ற கேள்வி எழுகிறது.
மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அப்துல் கலாம் அனைவராலும் மதிக்கப்படக் கூடியவர். அவரை பாஜகவும் மிகவும் மதிக்கிறது. சொல்லப்போனால் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கியது பாஜக தான்.
ஆனால் இன்று அவரை ஒரு அரசியல் மையம் போல வைத்துக் கொண்டு கமல் செயல்படுகிறார். கமல் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார், அவர் அரசியலில் இறங்கட்டும், இறங்கி எப்படி மக்கள் பணியாற்றுகிறார் என்பதை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
அதை மட்டும் மறந்துவிட்டீர்களா தமிழிசை
அப்துல் கலாம் அனைவருக்கும் பொதுவானவர் என்று தமிழிசை கூறுவது விநோதமமாக இருக்கிறது. ராமேஸ்வரத்தில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட கலாம் நினைவிடத்தில் பகவத் கீதையை வைத்து உள்நோக்கம் கற்பித்ததை ஏனோ வசதியாக மறந்துவிட்டார்.
பகவத் கீதையை வைத்த விஷமம் என்ன?
கடந்த ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் அப்துல் கலாமின் நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. அவரின் சாதனைகள், அருமை பெருமைகளை நினைவிடத்தில் அமைத்த பாஜக அரசு விஷமத் தனமாக அவர் வீணை வாசிப்பது போன்ற சிலையையும் அந்த சிலைக்குக் கீழே பகவத் கீதையையும் வைத்தது.
சர்ச்சையை ஏற்படுத்திய பகவத் கீதை
குடியரசுத் தலைவர் என்பவர் இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் சாதி, மத, இன, மொழி என அனைத்திற்கும் அப்பாற்பட்டவர், பகவத்கீதை வைக்கப்பட்டது தவறு என்றும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போ மட்டும் அப்படி?
இதனையடுத்து கலாமின் பேரன் சலீம் அவரது சிலைக்குக் கீழே குரான் மற்றும் பைபிளை வைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் கலாம் சிலைக்குக் கீழே பகவத் கீதையை வைத்து அவருக்கு தங்கள் சாயத்தை பூச நினைத்த பாஜக தான் இப்போது அவர் பொதுவானவர் என்று கமல் விஷயத்தில் கூறுவது வேடிக்கையாக உள்ளது.