ஒவ்வொரு மாநிலத்திலும் தாமரை மலர்ந்து வருகிறதாம்.. தமிழிசையே சொல்லிட்டாங்க!
சென்னை: ஒவ்வொரு மாநிலத்திலும் தாமரை மலர்ந்து வருகிறது என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்று கோரி சென்னை சேப்பாக்கத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழிசை பேசுகையில், பெண்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
எனவே தமிழக முதல்வர் டாஸ்மாக்கை மூடி விட்டு, மருத்துவமனை தோறும் மறுவாழ்வு மையங்களை தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தாமரை மலர்ந்து கொண்டிருக்கிறது.
ஓயமாட்டோம்
தமிழகத்தில் மதுகடைகள் மூடும் வரை ஓயமாட்டோம். எங்கள் போராட்டம் தொடரும். தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியது திமுகதான். இதற்கு ஸ்டாலின்தான் பிராயசித்தம் தேட வேண்டும்.
மாற்றம் கொண்டு வருவோம்
தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். எந்த தெரு வழியாகவும் விநாயகர் ஊர்வலம் செல்லும்படி மாற்றம் செய்வோம். ஒரு காலத்தில் இந்துக்களை திருடர்கள் என்று கூறியவர்கள், தற்போது கோயில் குளங்களை தூர்வாரி வருகின்றனர்.
குடித்து பழகு
படித்து பழகு என்று சொல்ல வேண்டிய அரசு, மக்களை குடித்து பழகு என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது. எனவே ஒரு கட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிட கட்சி இருக்கவே முடியாது. தமிழகத்தை காவிகள் ஆளலாம், பாவிகள்தான் ஆளக் கூடாது என்றார் அவர்.
தலைமை செயலகம் நோக்கி...
தமிழக பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். திராவிட கட்சி என்று எழுதப்பட்ட உருவ பொம்மையை பாடை கட்டி எடுத்துச் சென்றனர்.