பிப்ரவரி 16 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்... தமிழிசை மேடம் ஒரு வாரம் செம பிஸி!
பிப்ரவரி 16 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை : பிப்ரவரி 16 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது : சென்னை ஆவடியில் ராணுவ ஆடை தயாரிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசிடம் மனு அளித்திருக்கிறேன். நீட் தேர்வின் போது கடந்த ஆண்டு சொல்லப்பட்ட குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜவடேகரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மாநில பாடத்திட்டத்தின் கீழ் அதிக கேள்விகள் இடம்பெற வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
பிப்ரவரி 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பாஜகவை பலப்படுத்துவது. அந்தந்த மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு மத்திய அரசு மூலம் தீர்வு காண முடியும் என்றால் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது. மாநில அரசின் மூலம் தீர்வு காண முடியும் என்றால் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை மேற்கொள்வதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியம்சம்.
தமிழகத்தில் எனது சுற்றுப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், அரசியல் ரீதியாக மட்டுமல்ல மக்களுக்கான சுற்றுப்பயணமாகவும் இருக்கும். தமிழகத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக உள்ளாட்சிகளில் இருக்கும் பிரச்னைகளுக்கான முழுமையான திட்டங்களை கொண்டுவர முடியும் என்றும் தமிழிசை கூறினார்.