ஆர்.கே.நகர் தோல்விக்கு சீனியர் தலைவர்களின் சதிதான் காரணம்... டெல்லிக்கு தமிழிசை 'பரபர' கடிதம்
ஆர்.கே.நகர் படுபயங்கரமான தோல்விக்கு கட்சி சீனியர் தலைவர்கள் ஒத்துழைப்பு தராததுதான் காரணம் என டெல்லிக்கு தமிழிசை சவுந்தரராஜன் விரிவாக கடிதம் அனுப்பியுள்ளாராம்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தோல்விக்கு தாம் காரணமே இல்லை என டெல்லி மேலிடத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விரிவாக கண்ணீர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, மீண்டும் கங்கை அமரனே போட்டியிடுவார் என பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வந்தனர். இதையடுத்து, கங்கை அமரனைப் பலரும் தொடர்பு கொள்ள அவரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் சில நாட்கள் சென்றுவிட்டார்.
பிரசாரம் செய்யும் அளவுக்கு உடல்நிலை இல்லை என அவரது தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இதையடுத்து யாரை வேட்பாளராக்குவது என்ற குழப்பம் பாஜகவுக்குள் ஏற்பட்டது. ஒருவழியாக, தமிழிசையின் ஆதரவாளரான கரு.நாகராஜன் டிசம்பர் 2-ந் தேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
போராடிய தமிழிசை
அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் முடியும் வரையில் நிர்வாகிகள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். இடைத்தேர்தலில் பணம் விளையாடுவது குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சாலையில் அமர்ந்து போராட்டமும் நடத்திப் பார்த்தார் தமிழிசை. வரலாறு காணாத பணம் விளையாடுகிறது. தேர்தலை ரத்து செய்துவிடுவதே சிறந்தது என அவர் கருத்து கூறியபோது, இடைத்தேர்தலை ரத்து செய்தால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனப் பதில் அளித்தார் பா.ஜ.க சீனியர் எம்.பி.
சீனியர்கள் ஒத்துழைப்பு இல்லை
இந்தக் கருத்தை தமிழிசை எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து விரிவான கடிதத்தை பா.ஜ.க தலைமைக்கு அனுப்பியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன், அதில் தமது பிரசாரத்துக்கு சீனியர்கள் யாரும் கை கொடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளாராம்.
தமிழிசை கணக்கு
ஏனெனில் இந்தப் படுதோல்வியைக் காரணமாக வைத்து தமிழிசையைப் பதவியில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்பதுதான் சீனியர்களின் பக்கா ப்ளானாம். இதை உணர்ந்துதான் சட்டசபை தேர்தலில் பெற்ற 3,500 வாக்குகள் கிடைத்தால்கூட போதும். தலைமையை சாந்தப்படுத்திவிடலாம் எனக் கணக்கு போட்டாராம் தமிழிசை
அதெப்படி நோட்டாவிடம் போய்..
ஆனால் நோட்டாவிடம் தோற்றுப் போனதையே டெல்லிக்குப் புகார் மேல் புகார் அனுப்பினார்கள் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு கொதித்துப் போன தமிழிசை, குறுகிய புத்தி கொண்டவர்களின் செயல்பாடுகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆர்.கே.நகரில் பெற்ற தோல்வி என்பது கூட்டுத் தோல்விதான். என்னை மட்டுமே சார்ந்த தோல்வி அல்ல' எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். கூடவே, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மூலமாகவும் தமிழக பா.ஜ.க பிரமுகர்களின் தேர்தல் செயல்பாடுகள் குறித்து தெரியப்படுத்தியிருக்கிறார். பதவிக்கு ஆபத்து வராது என உறுதியாக நம்புகிறாராம் தமிழிசை.