காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்க காங்கிரசுக்கு தகுதியில்லை: தமிழிசை தாக்கு
கோவை: காவிரி நதிநீர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்க காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைய நாங்கள் எப்போதும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. உரிய சட்டத்தின் மூலம் வலிமையாக அமைக்க விரும்புகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த விவகாரத்தில் உண்ணாவிரதம் இருக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அப்போது அவர்கள் எங்கே போனார்கள். முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற்று வீடு திரும்ப விரும்புகிறோம்.
சசிக்குமார் கொலை குற்றவாளிகள் கோவையில் தான் பதுங்கியுள்ளனர். அவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. இந்து பிரமுகர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். சசிக்குமார் கொலையின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பலரை போலீசார் கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க அவர்களது உறவினர்கள் சிரமப்படுகிறார்கள். அதனை உரிய அதிகாரிகள் கருத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.