விநாயகர் ஊர்வலத்துக்கு எதிராக கைத்தடி ஊர்வலம்.. இது மதசார்பின்மையின் அடையாளமா?... காண்டான தமிழிசை
சென்னை: விநாயகர் ஊர்வலத்துக்கு எதிராக கைத்தடி ஊர்வலம் நடத்திய பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளுக்கு தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஒன்றாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அதுபோல் திருவல்லிக்கேணியில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடத்தப்பட்டது.
அப்போது அங்கு வந்த பெரியார் திராவிடர் கழகத்தவர்கள் கைத்தடி ஊர்வலத்தை நடத்தினர். மத உணர்வுகளை புண்படுத்தியதாக தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் விநாயகர் ஊர்வலத்திற்கு எதிராக திருவல்லிக்கேணியில் கைத்தடி ஊர்வலம் நடத்திய பெரியார் திராவிட கழகத்தினர் செயல் கண்டிக்கத்தக்கது.இந்து மத ஊர்வலங்களுக்கு எதிராக இவ்வாறு நடந்து கொள்வதுதான் மதசார்பின்மையின் அடையாளமா?கைத்தடிகளிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.