எச் ராஜா டுவீட்டுக்கு வேதனை!... திமுக டுவீட்டுக்கு கண்டனமா?.... தமிழிசையின் டபுள் டாக்!!
கனிமொழி குறித்து எச் ராஜா டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு கண்டிக்காமல் மனவேதனை அடைவதாக தெரிவித்த தமிழிசை திமுகவின் கருத்து கண்ணியம் இல்லை என்கிறார்.
Recommended Video
சென்னை: கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாளின் வாழ்க்கை குறித்து கண்ணியமில்லாத டுவீட்டை போட்ட எச் ராஜாவை கண்டிக்க மனமில்லாத தமிழிசை அதற்கு பதிலடியாக ஆர் எஸ் பாரதி போட்ட கருத்தில் மட்டும் கண்ணியத்தை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டுவிட்டர் பக்கம் வந்தாலே தாறுமாறாகவே கருத்துகளை பதிவிடுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அரசியல் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் கேட்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது, எல்லாருக்கும் எதிர்க்கும் கடும் செயலை ஆதரிப்பது போன்ற செயல்களில் எச் ராஜா இறங்கி காதில் ரத்தம் வழியும் அளவுக்கு வாங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையே.
பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரத்தில் ஆளுநர் என்ற சொல் வந்ததது குறித்து ஆளுநரை திரும்பி பெற வேண்டும் என்று திமுக மட்டுமல்லாது மற்ற கட்சிகளும் போர்க் கொடி உயர்த்தின.
தனிப்பட்ட வாழ்வை இழுத்த ராஜா
திமுகவின் கோரிக்கைக்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க இயலாமல் கருணாநிதி- ராசாத்தியம்மாள் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும் அவரது மகள் கனிமொழி குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு டுவீட்டை எச் ராஜா போட்டுவிட்டார். இதற்கு திமுக தலைமை என்னவோ கீழ்த்தரமான கருத்துக்கெல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. ஆனால் திமுகவினர் விடாது எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
எச் ராஜாவுக்கு பதிலடி
எச் ராஜாவின் கருத்துக்கு பதிலடியாக திமுகவின் முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி, எச் ராஜாவின் பிறப்பையும் , அவரது தாயின் தாய்மையையும் சந்தேகப்படும் அளவுக்கு ஒரு பதிலடியை கொடுத்தார். எச் ராஜாவின் டுவீட் தவறு என்றால் ஆர் எஸ் பாரதியின் டுவீட்டும் தவறே. ஆர் எஸ் பாரதியை திமுக கண்டிக்க வேண்டும் என்றால் எச் ராஜாவை பாஜக கண்டிப்பதுதானே நியாயம்.
எச் ராஜாவின் கருத்துக்கு வேதனை
இந்நிலையில் எச் ராஜாவின் கருத்துக்கு சிறிதும் கண்டிக்க மனம் இல்லாமல் மனம் வருந்துகிறேன் என்று தமிழிசை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை குறை கூறினாலே தய்ய தக்க தய்ய தக்க என குதிக்கும் தமிழிசை ஈயம் பூசியது போலும் பூசாத மாதிரியும் எச் ராஜாவின் டுவீட்டுக்கு பதில் கொடுத்திருந்தார். இதற்கு அவர் எந்த கருத்தையும் பதிவிடாமல் இருந்திருந்தாலே பரவாயில்லை போலும்.
|
திமுக கண்ணியம்
எச் ராஜாவின் பிறப்பையே சந்தேகம் கிளப்பும் அளவுக்கு டுவீட் போட்ட திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதியை மட்டும் கண்டித்து தமிழிசை ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் தமிழகஅரசியல் நாகரீகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும்என நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்கவேண்டும். திமுக ஆர் எஸ் பாரதியின் கடிதம் தாய்மையைக்கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று, திமுக இதைக்கண்டித்தால்மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
திமுகவிடம் மட்டும் கண்ணியமா
எச் ராஜாவும், ஆர் எஸ் பாரதியும் கூறிக் கொண்ட கருத்துகளும் பதிலடிகளும் தவறு என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இதை எச் ராஜாதான் ஆரம்பித்திருந்தார் என்றாலும் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்திருக்கலாம், ஆனால் தாய்மையை கொச்சைப்படுத்தியது தவறுதான். இதில் ஒன்றை மட்டும் கண்டிக்காமல் மற்றொன்றை மற்றும் கண்டிப்பது சரியா. ஆர் எஸ் பாரதியை திமுக கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும் என்று தமிழிசை கூறுகிறாரே அதே கண்ணியத்தை திமுகவும் பாஜகவிடம் இருந்து எதிர்பார்க்கும் அல்லவா. இரண்டுமே ஒரே பிரச்சினை என்றாலும் அதில் தமிழிசை இரு மாதிரியாக பேசுவது சரியல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.