பாஜகவை விட்டு விலகலா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
பாஜகவிலிருந்து தமிழிசை வெளியேற போகிறார் என்ற தகவல்களில் உண்மை இல்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: பாஜகவிலிருந்து நான் விலக போகிறேனா. இந்த தகவல்களில் துளிக் கூட உண்மை இல்லை என்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.
பாஜக மாநில தலைவராக உள்ளவர் தமிழிசை சௌந்தரராஜன். இவருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் ஒற்றுமை இல்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் தமிழிசைக்கும் அதிருப்தி இருப்பது போன்றே காணப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெறுவதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழிசை கூறியிருந்தார். ஆனால் பொன். ராதாகிருஷ்ணனோ இதற்கு எதிர்மறையான கருத்தையே கூறியிருந்தார்.
அதுபோல் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் தமிழிசை அறிவித்து கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் கட்டண உயர்வு சரியானதே என்று பொன்னார் முரண்பாடாக பேசியிருந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே மனகசப்பு இருந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் பதவி விலக போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் தமிழிசையோ இது விஷமத்தனமான தகவல் என்று கூறி மறுப்பு தெரிவித்தார்.
அந்த வகையில் தமிழிசை பாஜகவிலிருந்தே விலக போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழிசையிடம் கேட்டதற்கு இந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறினார்.
அதுபோல் எச்.ராஜா மற்றும் எஸ்வி சேகர் ஆகியோருக்கு எதிராக கட்சி மேலிடத்தில் தமிழிசை புகார் தெரிவித்ததாக வந்த செய்தியை அவர் மறுத்ததோடு பாஜக பலமடைந்து வருவதை தடுக்கவே இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்புவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.