காசிக்குப் போவது கூடத் தான் கட்டாயம்... அதற்கு மானியம் தரவில்லையே... தமிழிசை எதிர் கேள்வி
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஹஜ் மானியம் ரத்து முடிவு மத அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மானியம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பாஜகவின் தனிப்பட்ட கருத்து இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஹஜ் புனித பயணிகளுக்காக மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மானியம் ரத்து குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ள கருத்தில், ஹஜ் மானியத்தை ரத்து செய்வதென்பது பாஜகவின் தனிப்பட்ட கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2012 முதலே உச்சநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் மானியம் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஹஜ் பயணத்திற்கு சலுகைகள் தேவையில்லை, அதனால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில்
காங்கிரஸ் அரசும் ஹஜ் மானிய ரத்து விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாக சொல்லிக் கொண்டு தான் இருந்தது. ஆகவே உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படியும், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த சிலரே கூட ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். அதனால் அத்தகைய கருத்துகளின் அடிப்படையிலேயே தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காசிக்கு போவதற்கு நிதி தருவதில்லையே
எல்லா மதத்திற்கும் ஒரு கடமை இருக்கிறது, ஆனால் எல்லா மதத்தினருக்கும் மானியம் கொடுக்கப்படுகிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். காசிக்கு போவது கட்டாயம் என்று இந்து மதம் சொல்கிறது ஆனால் அதற்காக அவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி வெகுநாளாகவே எழுகிறது.
மதம் சார்ந்து எடுத்த முடிவல்ல
எனவே பல மதங்கள், பல நம்பிக்கைகள் இருக்கும் போது ஒரு மதத்திற்கு மட்டும் நிதி கொடுக்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். அதுமட்மின்றி இது மதம் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவும் அல்ல, ரத்து செய்யப்பட்ட மானியமானது பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்றே அரசு அறிவித்துள்ளது.
ஒரே கண்ணோட்டம் வேண்டாம்
ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல் அதில் உள்ள நன்மைகளை பார்க்க வேண்டும். பெண் குழந்தைகளின் கல்விக்காக அந்த மானியமானது செலவு செய்யப்படும் என்று ஆக்கப்பூர்வமான முடிவைத் தான் பாஜக எடுத்துள்ளது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.