சோபியாவின் கோஷம் தேச பாதுகாப்பு சம்பந்தமானது... தமிழிசை பகீர் பேச்சு
சென்னை: மாணவி சோபியாவை யாரோ இயக்குகிறார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சோபியாவின் கோஷம் தேச பாதுகாப்பு சம்பந்தமானது என்றும் தெரிவித்தார்.
சென்னை- தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா என்ற மாணவி பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து அவருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த மாணவி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இன்டிகோ விமானத்தில் நான் கட்சி கூட்டத்துக்கு தூத்துக்குடி செல்ல பயணித்தேன். எனது இருக்கை எண் 3, சோபியாவின் இருக்கை எண் 8.
கோஷம்
நான் எனது இருக்கையில் அமர்ந்தவுடன் பாசிச பாஜக அரசு ஒழிக என சோபியா கோஷமிட்டார். அப்போது நான் ஏதோ சின்ன பெண் கோஷமிடுகிறார் என விட்டுவிட்டேன். இதை தொடர்ந்து மீண்டும் அவர் தொடர்ந்து கோஷமிட்டார்.
பொது தளத்தில்
எனினும் நாகரிகம் கருதியும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படக் கூடாது என்று கருதியும் சமூக அக்கறையாலும் நான் அமைதியாக இருந்தேன். பின்னர் விமானத்தில் இருந்து இறங்கியதும் அந்த பெண் என்னை பார்த்து முறைத்துக் கொண்டே சென்றார். அப்போது அவரிடம் பொது தளத்தில் இப்படி பேசுவது முறையா என கேட்டேன்.
போலீஸில் புகார்
அதற்கு அவரோ இது எனது பேச்சுரிமை என்றார். அதுமட்டுமல்லாமல் என்னை அநாகரிகமாக பேசினார். அவரை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். எனக்கு அந்த சந்தேகம் இருந்தது. அதனால் போலீஸில் புகார் அளித்தேன்.
ஸ்டாலின் கண்டனம்
பேச்சுரிமை என்றால் அதற்கான இடம், நேரம், களம் எல்லாம் கிடையாதா. அதற்காக விமானத்தில் பேசலாமா. வீட்டுக்கு சென்று சண்டையிட்டால் அது சரியாகிவிடுமா. பேசுவது என்றால் மேடை போட்டு பேச வேண்டும். நானும் வருகிறேன், அவர்களையும் வர சொல்லுங்கள். சகிப்புத்தன்மை பாஜகவுக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கு கிடையாதா? எங்கு பார்த்தாலும் பேசி விடுவதா. பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒரு தலைவருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா. இந்த சம்பவத்துக்கு என்னை ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
இவர்கள் நியாயம் கூறுவதா
நான் கேட்கிறேன், அவரது கட்சியை பற்றி தவறாக பேசியவர்களை மெட்ரோ ரயிலில் அடித்ததை மறந்துவிட்டாரா, தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் தினகரன் அலுவலகத்தை எரித்தவர்கள் இன்று நியாயம் பேசுவதா என்றார்.