தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது- தமிழிசை சூளுரை
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது என்று தமிழிசை சவுந்திரராஜன் கற்பூரம் அடிக்காத குறையாக உறுதியளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் கோவில் சிலை திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலியான சிலையை வழிபடுகிறோமா என்ற கேள்வி பக்தர்களிடம் எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
எதிர்கொள்வார்
முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை யார் வரம்பு மீறி பேசினாலும் அது தவறுதான். கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா, தனது மீதான புகாரை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார் என்றார்.
ஒரு எம்எல்ஏ கூட இல்லை
இதைத் தொடர்ந்து ராஜபாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் நாம் செயல்படுகிறோம்.
அமைக்க முடியாது
தமிழகத்தில் கூட்டணியும் கிடையாது. தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். நமக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் பாஜக நிச்சயம் பலம் பெறும். வருங்காலத்தில் பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும்.
தாமரை மலர்ந்தே தீரும்
திராவிட கட்சிக்கு எதிராக பணியாற்ற வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வை அசைக்கக் கூட முடியவில்லை. பிறகு எப்படி மோடியை அசைக்க முடியும்? எனக்கு செல்போனில் பல வகையில் மிரட்டல் வருகிறது. பா.ஜனதாவை தமிழகத்தில் அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று ஆக்ரோஷமாக பேசினார்.